×

உயிருக்கு பயந்து நடுக்கடலில் நீந்தினர் நாகை மீனவர் கட்டையால் தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே செருதூர் சிங்காரவேலர்நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் எண்முருகன்(48). இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் முத்து, முருகவேல், சின்னையன் உள்ளிட்ட 4 பேர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் வேதாரண்யம் அருகே கோடியக்காட்டிற்கு தென்கிழக்கே 5 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு பைபர் படகில் வந்த 3 இலங்கை கடற்கொள்ளையர்கள், எண்முருகனின் படகில் ஏறி தாங்கள் வைத்திருந்த இரும்பு கம்பி மற்றும் கட்டையால் எண்முருகனை சரமாரி தாக்கினர். இதில் தலை மற்றும் கை பகுதிகளில் பலத்த காயமடைந்த அவர் ரத்த காயங்களுடன் உயிர்பிழைப்பதற்காக கடலில் குதித்தார். பைபர்படகில் இருந்த மற்ற 3 மீனவர்களையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்க முயன்ற போது அவர்களும் உயிருக்கு பயந்து கடலில் குதித்தனர்.

இதையடுத்து இலங்கை கடற்கொள்ளையர்கள் படகில் இருந்த வலைகள், மீன்கள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இதில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடலில் தத்தளித்த 4 மீனவர்களும் இலங்கை கடற்கொள்ளையர்கள் அங்கிருந்து சென்றவுடன் தங்களது பைபர் படகில் ஏறி நேற்று அதிகாலை 5 மணியளவில் செருதூர் வந்தனர். பின்னர் எண்முருகன் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

The post உயிருக்கு பயந்து நடுக்கடலில் நீந்தினர் நாகை மீனவர் கட்டையால் தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Enmurugan ,Tsunami ,Cheruthur Singharavelarnagar ,Velanganni ,Nagapattinam district ,Muthu ,Murugavel ,Chinnayan ,
× RELATED நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில்...